ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்; குழந்தை பலி

ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதிய விபத்தில் குழந்தை பலியானது.
ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்; குழந்தை பலி
Published on

படப்பை,

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கவுஷ்பீர் (வயது 24). இவருடைய மனைவி சுமையா இவர்களுக்கு சாஜியா என்ற 11 மாத குழந்தை உள்ளது. இவர்கள் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் காஞ்சீபுரம் மாவட்டம் கோவளம் பகுதியில் உள்ள தர்காவுக்கு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்று கொண்டிருந்தனர்.

ஒரகடம் அருகே உள்ள மாத்தூர் பகுதியில் சாலை வளைவின் அருகே மோட்டார் சைக்கிள் செல்லும்போது அந்த வழியாக வந்து திரும்பிய தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் முன்னால் அமர்ந்திருந்த குழந்தை உள்பட 3 பேரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சாஜியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. கவுஷ்பீர் மற்றும் சுமையா இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய தனியார் பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com