ஒரகடம் அருகே ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; காவலாளி பலி

ஒரகடம் அருகே ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காவலாளி பலியானார்.
ஒரகடம் அருகே ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; காவலாளி பலி
Published on

படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரகடம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. ஒரகடம் அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளும், ஷேர் ஆட்டோவும் மோதிக் கொண்டன. இதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன், ( வயது 36), ஷேர் ஆட்டோவில் சென்ற செங்கல்பட்டு அடுத்த பரனூர் பகுதியை சேர்ந்த சுஜாதா (36), ஒரகடம் பகுதியை சேர்ந்த காவலாளி ரங்கநாதன் (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரங்கநாதனை மேல் சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com