பள்ளிப்பட்டு அருகே குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து மறியல் சாலையில் சமைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்

பள்ளிப்பட்டு அருகே குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.
பள்ளிப்பட்டு அருகே குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து மறியல் சாலையில் சமைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அம்மையார்குப்பம் வள்ளலார் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இருப்பினும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றனர். அங்கிருந்த ஊராட்சி செயலாளரிடம் குடிநீர் குறித்து கேட்டனர். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து அவரை வெளியேற்றி அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.

அதன் பிறகு அவர்கள் காலி குடங்களுடன் மடவலம் கூட்ரோட்டில் ஆந்திர பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையில் அடுப்பு அமைத்து சமையல் செய்ய தொடங்கினர். இதற்காக ஒரு சிலர் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று சமையல் செய்ய தண்ணீரை இரவல் வாங்கி வந்தனர்.

இதற்குள் தகவல் அறிந்து ஆர்.கே.பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சாலையில் சமையல் செய்தவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காலதாமதமாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அங்கு வந்து சேர்ந்தனர். அந்த பகுதியில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைத்து தருவதாகவும், தற்காலிகமாக டிராக்டர்கள் மூலம் குடிநீர் வழங்குவதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com