பனப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை

பனப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை
Published on

பனப்பாக்கம்,

பனப்பாக்கத்தை அடுத்த துறையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக தரணிகிருஷ்ணன் என்பவரும், விற்பனையாளராக ஞானவேல் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இருவரும் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு விற்பனை நேரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கடையின் விற்பனையாளருக்கும், நெமிலி போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசாரும், விற்பனையாளர் ஞானவேலும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், கடையில் பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் ஒரு சில மதுபாட்டில்களை எடுத்துக்கொண்டு திரும்பி சென்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து கடையை சுற்றிலும் போலீசார் நடத்திய சோதனையில், கடையில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலிக்காமல் இருக்க மின்சாரத்தை மர்மநபர்கள் துண்டித்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் தினமும் கடைக்கு மது வாங்குவது போல் வந்து நோட்டமிட்டு, அலாரம் இருப்பதை அறிந்துள்ளனர். இதனால் தான் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக மின்சார இணைப்பை துண்டித்து, பின்னர் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையில் விற்பனையான சுமார் ரூ.4 லட்சத்தை மேற்பார்வையாளர் வீட்டுக்கு எடுத்து சென்றதால் அந்த பணம் தப்பியது.

இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த மாதம் நெமிலி புன்னை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில், மர்மநபர்கள் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மினிவேனில் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com