பென்னாகரம் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Published on

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்துப்பாடி ஊராட்சிக்குட்பட்ட மடம் காட்டுக்கொட்டாய் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படவில்லை. இங்கு தற்போது மினி டேங்க் மட்டுமே உள்ளது. இதன் மூலம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் கிராமமக்களுக்கு போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.

இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்தநிலையில் குடிநீர் கேட்டு நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கூத்தப்பாடி பிரிவு ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி, பென்னாகரம் கூட்டுறவு சங்க தலைவர் ரவி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com