பெரம்பூர் அருகே துணிகரம்: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 60 பவுன் தங்கம், வைர நகைகள் கொள்ளை

பெரம்பூர் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை அவை வைக்கப்பட்டு இருந்த லாக்கரோடு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பெரம்பூர் அருகே துணிகரம்: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 60 பவுன் தங்கம், வைர நகைகள் கொள்ளை
Published on

திரு.வி.க. நகர்,

சென்னை பெரம்பூரை அடுத்த பெரியார் நகர் கந்தசாமி சாலையில் வசித்து வருபவர் தங்கவேலு (வயது 63). இவர் தமிழக அரசின் தொழிலாளர்துறை பிரிவில் இணை ஆணையராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. 2-வது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இதனால் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தங்கவேலு மனைவி மற்றும் மகளுடன் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை தங்கவேலுவின் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் உரிமையாளர் தங்கவேலுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, இன்ஸ்பெக்டர் பரணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

வீட்டின் முதல் தளத்தில் 3 அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில் நகைகள் வைக்கப்பட்டு இருந்த லாக்கரை மர்மநபர்கள் அப்படியே தூக்கிச் சென்றுள்ளனர். அந்த லாக்கரில் சுமார் 60 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

மதுரையில் இருந்து தங்கவேலு வந்த பிறகு தான் கொள்ளைபோன நகைகளின் மதிப்பு எவ்வளவு? என்பது முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com