

புதுச்சேரி,
புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம் மீனவர்களும் அதையொட்டிய தமிழக பகுதியான நல்லவாடு மீனவர்களும் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மீன் பிடிப்பது தொடர்பாக அவர்களுக்குள் இந்த பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
கடந்த 28-ந் தேதி இரு தரப்பு மீனவர்களும் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அருகருகே வலை விரித்ததில் பிரச்சினை ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நல்லவாடு கிராம பஞ்சாயத்தார்கள் கூடி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது. இந்தநிலையில் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மீது தவளக்குப்பம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த 1-ந் தேதி நள்ளிரவு சினிமாவுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் நல்லவாடு கிராமத்தில் மீன்பிடி பொருட்கள் பாதுகாப்பு கிடங்கில் வைத்திருந்த வலைகளை தீவைத்து கொளுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் நல்லவாடு மீனவர்கள் ஆத்திரமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலடி தரும் வகையில் தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் தயாரானார்கள். வீராம்பட்டினம் மீனவர்களும் திரண்டனர். இதனால் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதுபற்றி தகவல் அறிந்து புதுச்சேரி, கடலூர் போலீசார் நல்லவாடு, வீராம்பட்டினம் கிராமங்களுக்கு சென்று மீனவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மோதல் தடுக்கப்பட்டது. ஆனாலும் 2 கிராமங்களிலும் தொடர்ந்து பதற்றம் நிலவியதால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையே மீனவ கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க புதுவை சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்காக 2 கிராமங்களில் இருந்தும் மீனவர்கள் வந்திருந்தனர். அப்போதும் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு வந்த மீனவர்கள் தங்களது கிராமங்களுக்கு திரும்பிச் சென்றனர். இந்த பிரச்சினையால் மீண்டும் இருதரப்பினரும் மோதிக் கொள்ளலாம் என்பதால் போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை தமிழக பகுதியான நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த னர். அப்போது அங்கு வந்த வீராம்பட்டினம் மீனவர்கள், எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை தாக்கினர்.
இதுபற்றி தகவல் தெரிந்து நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மேலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் அங்கு திரண்டு வந்தனர். இருதரப்பினரும் நடுக்கடலில் கத்தி, வீச்சரிவாள், சுளுக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மோதிக் கொண்டனர். இரு தரப்பையும் சேர்ந்த 2 படகுகள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தையொட்டி அங்கு முகாமிட்டு இருந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், பாலகிருஷ்ணன், ஜிந்தா கோதண்டராமன், ரங்கநாதன் மற்றும் போலீசார் மோதலில் ஈடுபட்ட மீனவர்களை தடுத்தனர். அங்கிருந்து கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.
ஆனால் போலீசாரையும் மீறி தொடர்ந்து அவர்கள் மோதலுக்காக முன்னேறிச் சென்றனர். நிலைமை எல்லை மீறி சென்றதால் மீனவர்களை எச்சரிக்கை செய்யும் வகையில் இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, புருஷோத்தமன், போலீஸ்காரர் மோகன் ஆகியோர் வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். 3 கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து மீனவர்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்.
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் வீராம் பட்டினத்தை சேர்ந்த சுகுமாறன் (வயது 37) காயமடைந்தார். மீனவர்கள் மோதிக் கொண்டதில் வீராம்பட்டினம் சுரேந்தர், பிரபு, நல்லவாடு கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்ற அய்யனாரப்பன் (40), மஞ்சினி, ரவிச்சந்திரன் ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் அய்யப்பன், மஞ்சினி இருவரும் மேல்சிகிச்சைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை இருந்து வருவதால் வீராம்பட்டினம், நல்லவாடு மீனவ கிராமங்களில் புதுவை மற்றும் தமிழக போலீசார் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு வந்துள்ள துணை ராணுவ படையினரும் உள்ளூர் போலீசாரும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு கலவரம் ஏற்படாமல் தடுக்க துணை கலெக்டர் சுதாகர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வீராம்பட்டினம் சுரேந்தர், நல்லவாடு நடுத்தெருவை சேர்ந்த அய்யனார் என்ற அய்யனாரப்பன் ஆகியோர் தனித்தனியாக போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் வீராம்பட்டினத்தை சேர்ந்த 300 பேர் மீதும், நல்லவாடு கிராமத்தை சேர்ந்த 300 பேர் மீதும் கும்பலாக கூடுவது, பயங்கர ஆயுதங்களுடன் திரண்டு வருதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு கிராம மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையொட்டி போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் புதுவை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.