பொன்னேரி அருகே ரூ.20 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

பொன்னேரி அருகே ரூ.20 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
பொன்னேரி அருகே ரூ.20 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
Published on

பொன்னேரி,

பொன்னேரியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார் நீதிமன்றம் போன்றவை செயல்பட்டு வருகிறது இந்த நீதிமன்றங்கள் இட நெருக்கடியாலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருந்து வந்தது. பல்வேறு வழக் குகளை நீதிமன்றங்களில் விசாரிக்க போதுமான இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தது பொன்னேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்ட வேண்டியதன் அவசியத்தை கருதி வக்கீல்களும் பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட நீதிபதியிடம் பொன்னேரி வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு பொன்னேரி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்ட அனுமதி வழங்கிய நிலையில் வருவாய்த்துறையின் சார்பில் இடம் தேர்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றங்கள் கட்டுவதற்காக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பஞ்செட்டி கிராமத்தில் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதில் 6 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதில் 4 ஏக்கர் நிலத்தில் வாழையும் 2 ஏக்கர் நிலத்தில் நெல்லும் பயிரிட்டிருந்தனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. நந்தகுமார், தலைமையில் பொன்னேரி தாசில்தார் புகழேந்தி, துணை தாசில்தார் அருள்வளவன், வருவாய் ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் பஞ்செட்டி கிராமத்திற்கு சென்றனர்.

அரசு நிலம் 4 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி ரூ.20 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர். மீதமுள்ள 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருப்பதை அறிந்து அறுவடை முடிந்த உடன் அந்த நிலமும் மீட்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com