பூந்தமல்லி அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து

பூந்தமல்லி அருகே பழைய இரும்பு பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
பூந்தமல்லி அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து
Published on

பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், பூந்தமல்லி அருகே பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையையொட்டி பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்து நடத்தி வந்தார். இங்கு பிளாஸ்டிக் பொருட்கள், பழைய இரும்புகள், வயர்கள் மற்றும் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் பலகைகள் ஆகியவற்றை தரம் பிரித்து வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று அதிகாலையில் இந்த கடையின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அங்கு இருந்ததால் தீ கொழுந்து விட்டுஎரிந்தது.

இதனால் ஏற்பட்ட கரும்புகையால் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு இரும்பு பொருட்கள் கடையில் எரிந்த தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்த கடையில் வேலை செய்து வருபவர்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிடுவார்கள்.

எனவே அதனால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமா? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com