போரூர் அருகே பணத்தகராறில் வாலிபரை கடத்தியவர் கைது

பணத்தகராறில் வாலிபரை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர் அருகே பணத்தகராறில் வாலிபரை கடத்தியவர் கைது
Published on

பூந்தமல்லி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி(வயது 27). இவர், ஆன்-லைனில் பொருட்களை விற்பனை செய்வதும், அதில் வாடிக்கையாளர்களை சேர்த்து விடும் தொழிலும் செய்து வருகிறார்.

தொழில் சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு லிங்கமூர்த்தி, தனது நண்பர் பாலாஜி(26) என்பவருடன் சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில் வசிக்கும் வினோத்குமார்(26) என்பவரை பார்க்க வந்தார்.

அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், லிங்கமுர்த்தியை தாக்கினார். மேலும் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அங்கு தயாராக நின்ற காரில் லிங்கமூர்த்தியை ஏற்றி கடத்திச்சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர் பாலாஜி, இதுபற்றி போரூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போரூர் உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இது தொடர்பாக அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, கடத்தப்பட்ட லிங்கமூர்த்தியை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையில் கடத்தப்பட்ட லிங்கமூர்த்தியை திருவள்ளூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் திருவள்ளூர் விரைந்தனர். போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. கடத்தப்பட்ட லிங்கமூர்த்தியை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

அப்போது இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட வினோத்குமாரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், லிங்கமூர்த்தியிடம் வினோத்குமார் ரூ.3 லட்சம் பணம் கட்டி ஆன்-லைன் தொழிலில் சேர்ந்து உள்ளார். மேலும் தனது நண்பர்களையும் அதில் பணம் கட்டி சேரவைத்தார். மேற்கொண்டு இந்த தொழிலில் ஆட்களை சேர்க்க முடியாததால் தான் கட்டிய பணத்தை திரும்ப தரும்படி லிங்கமூர்த்தியிடம் வினோத்குமார் கேட்டார்.

ஆனால் ஒரு முறை கட்டி விட்டால் பணம் திரும்ப கிடைக்காது என்று லிங்கமூர்த்தி கூறி விட்டார். வினோத்குமாரை நம்பி பணம் கட்டியவர்கள், பணத்தை திரும்ப கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்தனர். இதனால் அந்த பணத்தை திரும்ப வாங்குவதற்காக சம்பவத்தன்று லிங்கமூர்த்தியை செல்போன் மூலம் பேசி அய்யப்பன்தாங்கல் வரவழைத்து கேட்டார்.

அவர் பணம் தர மறுத்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் தான் தயாராக ஏற்பாடு செய்து இருந்த ஆட்களை வைத்து லிங்கமூர்த்தியை காரில் கடத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com