

பெங்களூரு,
ராமநகர் மாவட்டம் பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அஞ்சனாநகரில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. கடந்த 24-ந் தேதி இரவு நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு அதிகாரிகள், ஊழியர்கள் சென்றிருந்தனர். நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் நிதி நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று காலையில் நிதி நிறுவனத்தை திறக்க அதிகாரிகள் வந்தனர். அப்போது முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நிதி நிறுவனத்தில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. கண்காணிப்பு கேமராக்கள், கம்ப்யூட்டர் திருடப்பட்டு இருந்தது. மேலும் லாக்கரில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணமும் மர்மநபர்களால் திருடப்பட்டு இருந்தது. இதுபற்றி உடனடியாக பேடரஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது நிதி நிறுவனத்தின் முன்பக்க கதவை கள்ளச்சாவி போட்டு திறந்து மர்மநபர்கள் உள்ளே சென்று திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லாக்கர் கதவையும் கள்ளச்சாவி போட்டு திறந்து உள்ளே இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். அத்துடன் போலீசாரிடம் சிக்காமல் இருக்க நிதி நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், கம்ப்யூட்டரையும் மர்மநபர்கள் தூக்கி சென்றிருந்தது தெரியவந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நிதி நிறுவனத்திற்குள் 2 பீர் பாட்டில்கள் மற்றும் எலுமிச்சை பழம், குங்குமம் கிடந்தது.
இதனால் மர்மநபர்கள் திருட்டில் ஈடுபடும் முன்பாக சாமிக்கு பூஜை செய்ததுடன், நிதி நிறுவனத்திற்குள் வைத்தே மதுஅருந்தியதும் தெரியவந்துள்ளது. திருட்டுப்போன மொத்த நகைகளின் மதிப்பு தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பேடரஹள்ளியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.