சத்தி அருகே, மின்சாரம் தாக்கி விவசாயி சாவு - உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு

சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தி அருகே, மின்சாரம் தாக்கி விவசாயி சாவு - உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு
Published on

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள பீக்கரிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 42). விவசாயி. இவர் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். தோட்டத்தில் சம்பூங்கி பூ பயிரிட்டுள்ளர். அவருக்கு கோகிலா (35) என்ற மனைவியும், அட்சயா (12) என்ற மகளும், கார்த்தி (10) என்ற மகனும் உள்ளனர்.

தங்கவேல் நேற்று காலை தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் கம்பிவேலியில் தலைகுப்புற விழுந்தபடி பிணமாக கிடந்தார். மின்சாரம் தாக்கி அவர் இறந்தது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்த கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து போலீசார் தங்கவேலுவின் உறவினர்களிடம் கொடுக்க சென்றனர்.

ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, வனவிலங்குகளிடம் இருந்து பயிரை காக்க தங்கவேலின் பக்கத்து தோட்டத்துக்காரர் கம்பி வேலியில் மின்சாரம் பாய்ச்சியுள்ளார். இந்த நிலையில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தங்கவேல் எதிர்பாராதவிதமாக கம்பிவேலியில் விழுந்துள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். அவரது சாவுக்கு காரணமான தோட்டத்துக்காரரை கைது செய்ய வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார் முதலில் நீங்கள் புகார் கொடுங்கள். அதன்பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் தங்கவேலுவின் உடலை பெற்றுக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் துண போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com