

சாத்தூர்,
சாத்தூர் மேட்டமலை அம்பேத்கர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாத்தூர்-சிவகாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சாத்தூர்- சிவகாசி சாலையில் மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.