செந்துறை அருகே வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் வீட்டில் 10 பவுன் நகை-பணம் திருட்டு - கடப்பாரையால் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

செந்துறை அருகே வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து 10 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
செந்துறை அருகே வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் வீட்டில் 10 பவுன் நகை-பணம் திருட்டு - கடப்பாரையால் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
Published on

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(வயது 32). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் ஊருக்கு திரும்பிய இவர் தனது தாய் பூங்கோதையுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் இளையராஜா தூங்கினார்.

இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்புறம் உள்ள கதவை கடப்பாரை மூலம் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இளையராஜாவுடைய தாயார் டிரங்பெட்டியில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் இளையராஜா தனது அரையில் வைத்திருந்த ரூ.34 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.

நேற்று காலை இளையராஜா எழுந்து பார்த்தபோது, பின்கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் அருகே பொருட்கள் சிதறி கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதில், முதலில் மர்ம நபர்கள், அப்பகுதியில் உள்ள கணேசன் அய்யர் என்பவரது வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கே எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து ஓடை வழியாக இளையராஜா வீட்டிற்கு வந்து பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர், என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் மலர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். மோப்பநாய் மலர் மோப்பம் பிடித்தபடி வீட்டின் பின்புறம் ஓடியது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஓடை வழியாக ஓடி கணேசன் வீடுவரை சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் அந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம், என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தாலுகா அலுவலகம் அருகே உள்ள 2 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. நடந்து வந்த பெண் ஒருவரிடம் நகை பறிப்பு சம்பவமும் நடந்துள்ளது. தொடர்ந்து தாலுகா அலுவலக பகுதியில் நடக்கும் கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து, போலீசார் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com