தஞ்சை அருகே, மண்வெட்டிக்காக கூலித்தொழிலாளி அடித்துக்கொலை வாலிபருக்கு வலைவீச்சு

தஞ்சை அருகே மண்வெட்டிக்காக கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சை அருகே, மண்வெட்டிக்காக கூலித்தொழிலாளி அடித்துக்கொலை வாலிபருக்கு வலைவீச்சு
Published on

சாலியமங்கலம்,

தஞ்சையை அடுத்த பூண்டி அருகே உள்ள மலையர்நத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் பெத்தையன்(வயது 56). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று வீடு திரும்பியதும் வீட்டில் இருந்த மண்வெட்டியை காணவில்லை என குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். அப்போது மண்வெட்டியை வாங்கி சென்ற அதே தெருவில் வசிக்கும் ரெத்தினம் நேரில் வந்து மண்வெட்டியை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பெத்தையனுக்கும், ரெத்தினத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ரெத்தினம் மகன் புண்ணியமூர்த்தி (34) அங்கு வந்து தனது தந்தையை தாக்கிய பெத்தையனின் தலையில் மண்வெட்டியால் தாக்கினார். இதில் ரத்தம் சொட்ட, சொட்ட பெத்தையன் மயங்கி விழுந்தார்.

பரிதாப சாவு

உடனே அருகில் இருந்தவர்கள் பெத்தையனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து புண்ணியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து புண்ணியமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்தார்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பெத்தையன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் தலையில் வலி ஏற்பட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெத்தையன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வலைவீச்சு

இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரனை நடத்தி வருகின்றனர். தலைமறைவான புண்ணியமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com