தக்கலை அருகே, தீயில் கருகி தொழிலாளி மர்ம சாவு

தக்கலை அருகே தீயில் கருகி தொழிலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தக்கலை அருகே, தீயில் கருகி தொழிலாளி மர்ம சாவு
Published on

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே பத்மநாபபுரம் மேற்கு கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவன் (வயது 50), தச்சுதொழிலாளி. இவருடைய மனைவி மினி(44). இவர், நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு விஷ்ணு(26) என்ற மகனும், சிமி என்ற மகளும் உள்ளனர். விஷ்ணு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிவனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிவன் வீட்டின் பின் பகுதியில் மாடிக்கு செல்லும் இடத்தில் தார்பாய் மூலம் கூடாரம் அமைத்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கூடாரத்தில் சிவன் தூங்கச் சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் தீயில் ஏதோ கருகிய துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது, கூடாரம் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகி இருந்தது. மலும், சிவனும் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து குடும்பத்தினர் தக்கலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்மமான முறையில் பிணமாக கிடந்த சிவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இரவு அப்பகுதியில் மின்வினியோகம் தடைபட்டது தெரியவந்தது. அப்போது, மெழுகுவர்த்தியை பற்ற வைத்தபோது தீவிபத்து ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com