தஞ்சை அருகே, பெற்றோர் எதிர்ப்பால் விஷம் குடித்த காதலர்கள்

தஞ்சை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் குடித்தனர். இதில் காதலன் பரிதாபமாக இறந்தார். காதலி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சை அருகே, பெற்றோர் எதிர்ப்பால் விஷம் குடித்த காதலர்கள்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த உதாரமங்கலம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி. விவசாயியான இவருடைய மகன் பழனி(வயது 24). இவர், திருவையாறு அருகே கண்டியூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்த வீரையன் மகள் ஜெனிதா(19). இவர் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் படித்து வருகிறார்.

பழனியும், ஜெனிதாவும் உறவினர்கள். இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரையும் தனித்தனியாக அழைத்து பெற்றோர் கண்டித்தனர்.

தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் மிகுந்த மனம் உடைந்தனர். இருவரும் தஞ்சையை அடுத்த கொல்லாங்கரை ஏரிக்கரைக்கு வந்தனர். வாழ்வில்தான் தாங்கள் இருவரும் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேருவோம் என்று முடிவு செய்து அவர்கள், தாங்கள் வாங்கி வந்த விஷத்தை குடித்தனர்.

பின்னர் பழனி தனது செல்போன் மூலம் தந்தை மணியை தொடர்பு கொண்டு தாங்கள் இருவரும் விஷம் குடித்து விட்ட தகவலை தெரிவித்தார். உடனே இருவருடைய குடும்பத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு வந்த அவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஜெனிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் மணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் குடித்தது, இதில் காதலன் இறந்தது ஆகிய சம்பவங்களால் இருவரது குடும்பத்தினரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com