தட்டார்மடம் அருகே வாகனம் மோதி கட்டிட தொழிலாளி சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தட்டார்மடம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தட்டார்மடம் அருகே வாகனம் மோதி கட்டிட தொழிலாளி சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
Published on

தட்டார்மடம்,

சாத்தான்குளம் அருகே வரிப்பிலான்குளத்தைச் சேர்ந்தவர் மரிய சந்தனம். இவருடைய மகன் பாத்திமா (வயது 34). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி வித்தியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாத்திமா நேற்று முன்தினம் தட்டார்மடம் அருகே போலையர்புரம் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றார். பின்னர் அவர் இரவில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

தட்டார்மடம் அருகே சுப்பிரமணியபுரம் ராஜீவ்காந்தி நகர் அருகில் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பாத்திமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வாகனம் மோதி இறந்த பாத்திமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பாத்திமாவின் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதாகவும், எனவே அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி, சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் பாத்திமாவின் உடலை வாங்க மறுத்து, அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பாத்திமாவின் உடலை உறவினர்கள் பெற்று சென்று இறுதிச்சடங்கு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com