தட்டார்மடம் அருகே பயங்கரம்: காரில் கடத்தி சென்று வியாபாரி அடித்துக்கொலை - 6 பேருக்கு வலைவீச்சு

தட்டார்மடம் அருகே காரில் கடத்தி சென்று வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தட்டார்மடம் அருகே பயங்கரம்: காரில் கடத்தி சென்று வியாபாரி அடித்துக்கொலை - 6 பேருக்கு வலைவீச்சு
Published on

தட்டார்மடம்,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ். இவருடைய மகன் செல்வன் (வயது 32). இவர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஜீவிதா. இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் செல்வனுக்கும், சிலருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று மதியம் செல்வன் மோட்டார் சைக்கிளில் சாத்தான்குளத்தில் இருந்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

தட்டார்மடம் அருகே கொழுந்தட்டு நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார் திடீரென்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. இதனால் செல்வன் சாலையில் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார்.

இதையடுத்து அந்த காரில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல் கீழே இறங்கியது. அவர்களை பார்த்ததும் செல்வன் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அவர் கள் செல்வனை விரட்டிச் சென்றனர்.

இதையடுத்து அங்குள்ள ஓட்டலுக்குள் செல்வன் புகுந்தார். அங்கு சென்ற அந்த நபர்கள், செல்வனை மடக்கி பிடித்து தங்களது காருக்குள் தூக்கி சென்றனர். பின்னர் அங்கிருந்து செல்வனை காரில் கடத்தி சென்றனர். காருக்குள் இருந்தபடியே செல்வனை அவர்கள் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்தனர்.

பின்னர் தட்டார்மடம் அருகே கடக்குளம் காட்டுப்பகுதிக்கு காரில் கடத்தி சென்றும், அவரை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, காட்டுப்பகுதியில் செல்வன் உடலை வீசிச் சென்றனர்.

அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிளாட்வின், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தட்டார்மடம் அருகே வியாபாரியை காரில் கடத்தி சென்று, அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com