படப்பை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

படப்பை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
படப்பை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நடுவீரப்பட்டு காயிதே மில்லத் தெரு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது, இவருடைய மகன் சாதிக் பாஷா(வயது 35). இவர் குரோம்பேட்டையில் உள்ள துணி கடையில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஷகிலா பானு(வயது 30) என்ற மனைவியும், ஹிஜாஸ்பாசில்(10), இதிரீஸ்(7) என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சாதிக் பாஷா தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தார். நடுவீரப்பட்டு சாய்பாபா தெரு அருகே செல்லும்போது எதிர்திசையில் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாதிக் பாஷா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாதிக் பாஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com