கடையம் அருகே, தோட்டத்தில் அட்டகாசம் செய்த கரடி சிக்கியது - வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்

கடையம் அருகே தோட்டத்தில் அட்டகாசம் செய்த கரடி சிக்கியது. வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்துச் சென்றனர்.
கடையம் அருகே, தோட்டத்தில் அட்டகாசம் செய்த கரடி சிக்கியது - வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
Published on

கடையம்,

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வனக்கோட்டம் கடையம் வனச்சரகம் பங்களாகுடியிருப்பு, கோட்டைவிளைபட்டி, முதலியார்பட்டி, அழகப்பபுரம், கல்யாணிபுரம், சிவசைலம் மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளில் உள்ள தோட்டங்களில் கரடி புகுந்து தேங்காய், சப்போட்டா மற்றும் பப்பாளி போன்ற பழங்களை சாப்பிட்டு அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து கரடியை பிடிக்க முதலியார்பட்டியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அதன்படி முதலியார்பட்டியை சேர்ந்த மகபூப்பாபு என்பவரது தோட்ட வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் கடந்த 12-ந் தேதி இரவு கரடி பிடிபட்டது. இதேபோல் கடந்த முறை பங்களாகுடியிருப்பு வனச்சரக அலுவலக இடத்தில் 2 கரடிகள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

கூண்டில் சிக்கியது

இந்த நிலையில் முதலியார்பட்டியில் உள்ள பழத்தோட்டத்தில் கரடி மீண்டும் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் மீண்டும் இரும்புக்கூண்டு வைத்தனர். அந்த கூண்டில் நேற்று காலையில் கரடி சிக்கியது.

தகவல் அறிந்ததும் முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் வனச்சரகர் நெல்லை நாயகம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் விரைந்து வந்தனர். கூண்டில் சிக்கிய கரடியை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். இது கடையம் பகுதியில் பிடிபடும் 4-வது கரடி ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com