கலவை அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

கலவை அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கலவை அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்
Published on

கலவை,

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பரிகால்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55), தி.மு.க. பிரமுகர். இவர் கடந்த 9-ந் தேதி அதிகாலை தனது நிலத்திற்கு சென்றார். அப்போது மர்ம நபர்கள் ராஜேந்திரனை அடித்து கொலை செய்தனர்.

இதுகுறித்து கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில், போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

மேலும் ராஜேந்திரனின் பக்கத்து நிலத்தை சேர்ந்தவர்களான பொன்னுசாமி (70), நந்தகுமார் (55) ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்தனர். பின்னர் ராஜேந்திரனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இதுகுறித்து பொன்னுசாமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் சமீபத்தில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் சோலார் கருவிகளை எனது நிலத்தில் போட்டேன். இதை பாதுகாக்க கல்சுவர் அமைக்க நீளமான கற்களை இறக்கினேன். அதனை ராஜேந்திரன் உடைத்து எறிந்தார். மேலும் அருகில் உள்ள தரிசு நிலத்தில் களம் அமைக்க முயற்சித்தபோது, அதனையும் ராஜேந்திரன் தடுத்து நிறுத்தினார்.

ராஜேந்திரன் வாங்குவதாக இருந்த நிலத்தை நான் வாங்கினேன். நிலத்தை அளக்க சென்ற போது, அதனை அளக்கவிடாமல் தடுத்தார். இதுபோன்று பல்வேறு தொல்லைகளை எனக்கு கொடுத்து வந்தார்.

நந்தகுமார் நிலத்திற்கு குப்பை, எரு எடுத்து செல்ல ராஜேந்திரன் வழிவிடவில்லை. என் நிலத்தின் வழியாக குப்பை, எருவை எடுத்து செல்ல அனுமதித்தேன். இதனால் நானும், நந்தகுமாரும் கூட்டாக சேர்ந்தோம். மேலும் ராஜேந்திரனை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். அதன்படி, சம்பவத்தன்று அதிகாலை 5 மணிக்கு 2 பேரும் சேர்ந்து ராஜேந்திரன் தலையில் கல்லால் தாக்கினோம். நிலைகுலைந்து அவர் மயங்கி விழுந்தார். பின்னர் கட்டையால் ராஜேந்திரனை தாக்கினோம். சிறிது நேரத்தில் ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து பொன்னுசாமி, நந்தகுமார் ஆகிய 2 பேரையும் கலவை போலீசார் கைது செய்து, ஆற்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொன்னுசாமி தனது சகோதரி கணவர் அண்ணாமலை என்பவரை கடந்த 1989-ம் ஆண்டு கொலை செய்தது தொடர்பாக சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com