

படப்பை, காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள மாத்தூர் பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.
நேற்று விடியற்காலை மர்ம நபர்கள் சிலர் இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் இணைப்புகளை முதலில் துண்டித்த அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பகுதியை உடைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சைரன் ஒலி சத்தத்துடன் ரோந்து போலீசார் வருவதை கண்டதும் திருடும் முயற்சியை கைவிட்டனர்.
இதனை பார்த்த போலீசார் கொள்ளையர்களை சிறிது தூரம் விரட்டிச்சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரகடம் போலீசார், கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வங்கி அதிகாரிகள் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.