படப்பை அருகே, சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது

படப்பை அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
படப்பை அருகே, சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூரை சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 26). இவர் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட நாட்டு சாராயத்தை எருமையூர் பகுதியில் விற்பனை செய்வதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து, போலீசார் அவரை தேடி வந்த நிலையில், மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையில் சோமங்கலம் போலீசார், எருமையூர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த பிரகாஷை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், எருமையூர் சமுதாயக்கூடம் பின்புறம் உள்ள முட்புதர் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாகவும், மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டுள்ளதாகவும் பிரகாஷ் தெரிவித்ததையடுத்து அங்கு அவரை அழைத்துச் சென்றனர்.

2 பேர் கைது

அப்போது அங்கு இருந்த 180 லிட்டர் எரிசாராய ஊறல் மற்றும் ஊறலுக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் 20 லிட்டர் நாட்டு சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.மேலும் இது தொடர்பாக பழந்தண்டலம் பகுதி அம்பேத்கர் தெருவை சேர்ந்த அருண்குமார், (29) என்பவரையும் போலீசார் பிடித்தனர்.

இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com