

தேனி,
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவர் போலீஸ்காரராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் நிவேதா. இவருடைய வீடு அதே ஊரில் உள்ளது.
நிவேதா கடந்த 13-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலையில் நிவேதாவும், கணேசனும் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் வாசல் கதவு மற்றும் உள்அறை கதவின் பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த வெள்ளி தட்டு, விளக்கு, பால் கிண்ணம் உள்பட 2 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் கணேசன் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.