திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கன்னத்தில் கடித்த வாலிபர் கைது

திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணின் கன்னத்தை கடித்து விட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கன்னத்தில் கடித்த வாலிபர் கைது
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 36 வயது பெண் திருமணம் ஆனவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சமையல் அறையில் தோசை சுட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கதவை திறக்கும் சத்தம் கேட்கவே அவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மெல்டஸ் மகன் ரபிக் (வயது 30) என்பவர் வீட்டின் காம்பவுண்டு கதவை திறந்து வந்து கொண்டிருந்தார்.

அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வீட்டிற்குள் எதற்காக வருகிறீர்கள்? என்று கேட்டார். அப்போது ரபிக், தாகத்திற்கு தண்ணீர் தருமாறு கேட்டார்.

உடனே அந்த பெண், தண்ணீர் இல்லை. வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ரபிக், அந்த பெண்ணை அவதூறாக பேசியதுடன் அவரது கன்னத்தில் கடித்து காயத்தை ஏற்படுத்தினார். மேலும் இதுபற்றி போலீசில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரபிக்கை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com