திருபுவனை அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் மோதல்

திருபுவனை அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதையொட்டி நடந்த திடீர் மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருபுவனை அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் மோதல்
Published on

திருபுவனை,

திருபுவனை அருகே ஆண்டியார்பாளையம் பேட் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி விஜயா (வயது 54). நேற்று முன்தினம் இறந்து போனார். இவரது உடலை அடக்கம் செய்ய ஆண்டியார்பாளையம் பகுதியில் உள்ள இடுகாட்டில் ஏற்பாடு செய்தனர்.

இதற்கு அங்கு குடியிருக்கும் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஜயாவின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையொட்டி விஜயாவின் உறவினர்கள் திருபுவனை போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு பிரிவினருக்கும், விஜயா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயாவின் உறவினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து மதகடிப்பட்டு சந்திப்பில் புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் மதியம் 2.30 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடலை அடக்கம் செய்ய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆண்டியார்பாளையம் பேட் பகுதி மக்களுக்கான இடுகாட்டில் விஜயாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மோதல் காரணமாக அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com