திருவையாறு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மீன் பண்ணை உரிமையாளர் பலி

திருவையாறு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மீன் பண்ணை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். பூண்டி மாதா ஆலயத்துக்கு வந்தபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருவையாறு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மீன் பண்ணை உரிமையாளர் பலி
Published on

திருவையாறு,

புதுச்சேரி பாரதியார் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ஆரோக்கியதாஸ். இவரது மகன் ஆலன் இமானுவேல் ஜெகன்(வயது 30). புதுச்சேரியில் மீன் பண்ணை வைத்துள்ள இவர், தனது நண்பர்கள் 15 பேருடன் ஒரு வேனில் வேளாங்கண்ணியில் நடந்த திருவிழா கொடியேற்றத்துக்கு வந்தார். பூண்டி மாதா ஆலயத்திற்கு திருவையாறு வழியாக சென்று கொண்டிருந்தனர்.

திருவையாறு அருகே உள்ள தில்லைஸ்தானத்தில் வேனை நிறுத்தி விட்டு அனைவரும் காவிரி ஆற்றில் குளித்தனர். இதில் ஆலன் இமானுவேல் ஜெகன் திடீரென தண்ணீரில் மூழ்கினார். அதனைப்பார்த்து அவருடன் வந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவிரி ஆற்றில் இறங்கி தேடினர். தீவிரமாக தேடிய அவர்களால் ஆலன் இமானுவேல் ஜெகன் உடலை மட்டுமே மீட்க முடிந்தது. இதுகுறித்து அவர்கள், திருவையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து ஜெகனின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புதுச்சேரி குறிஞ்சி நகரை சேர்ந்த சிரில் ஜார்ஜ் கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூண்டி மாதா ஆலயத்துக்கு வந்தபோது மீன் பண்ணை உரிமையாளர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் நண்பர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com