திருவையாறு அருகே, குடும்ப தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை - மருமகன் கைது

திருவையாறு அருகே குடும்ப தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
திருவையாறு அருகே, குடும்ப தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை - மருமகன் கைது
Published on

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஆவிக்கரை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 45). தொழிலாளி. இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

சண்முகம் தனது மூத்த மகள் செண்பகத்தை திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் செந்தில்குமார்(28) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். நேற்று ஆவிக்கரையில் குடும்ப பிரச்சினை காரணமாக சண்முகத்துக்கும், அவருடைய மருமகன் செந்தில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், சண்முகத்தை அடித்து கீழே தள்ளி உள்ளார். அப்போது சண்முகம் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப தகராறில் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com