தூத்துக்குடி அருகே, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி சாவு - கொலை வழக்காக மாற்றம்

தூத்துக்குடி அருகே அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலைமுயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி சாவு - கொலை வழக்காக மாற்றம்
Published on

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் சாத்தன். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தன், மூத்த மகள் வசந்தாவின் பெயரில் உயில் எழுதி வைத்தாராம். இதனால் அவருடைய தம்பிகள் காசி (வயது47), போஸ், சகோதரி தங்கலட்சுமி ஆகியோர் வசந்தா குடும்பத்தாரிடம் பேசாமல் இருந்து வந்தனர். கூலி தொழிலாளியான காசி, சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வசந்தாவின் மகள் கல்லூரி மாணவி பரிபூரண முத்துலட்சுமி(19) என்பவர், போஸ் குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் போஸ், காசி, அவருடைய மகன் சதீஷ்குமார் ஆகியோர் வசந்தாவின் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டார்களாம். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அரிவாள் வெட்டு

இதில் ஆத்திரம் அடைந்த வசந்தா, அவருடைய கணவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து காசியையும், அவருடைய மகன் சதீஷ்குமாரையும் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த காசி, சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தி, வசந்தா, அவர்களுடைய மகள் பரிபூரண முத்துலட்சுமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கொலை வழக்கு

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காசி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com