திருக்கோவிலூர் அருகே, மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்,வாலிபர் பலி

திருக்கோவிலூர் அருகே மொபட்டும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.
திருக்கோவிலூர் அருகே, மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்,வாலிபர் பலி
Published on

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் தினேஷ் (வயது 20). இவர் தனது அக்காளின் திருமணத்தையொட்டி வீட்டை அலங்கரிக்க தேவையான பொருட் களை வாங்குவதற்காக நேற்று முன்தினம் மாலை ஒரு மொபட்டில் ஜி.அரியூர் கடைவீதிக்கு சென்றார். பின்னர் அவர் அலங்கார பொருட் களை வாங்கிக் கொண்டு மொபட்டில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். திருக்கோவிலூர் அடுத்த காடியார் பிரிவு சாலையில் அய்யனாரப்பன் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட தினேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்காளின் திருமணத்தையொட்டி வீட்டுக்கு அலங்கார பொருட்கள் வாங்க சென்ற வாலிபர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com