திருப்பத்தூர் அருகே பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனை முற்றுகை

திருப்பத்தூர் அருகே பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூர் அருகே பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனை முற்றுகை
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள கந்திலியை சேர்ந்தவர் பஷ்வராஜ் (வயது 35), திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமித்ரா (28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. திரிஷா (8) என்ற மகளும், நாதன் (2) என்ற மகனும் உள்ளனர். திருமணமான நாள் முதலே வரதட்சணை கேட்டு பஷ்வராஜின் குடும்பத்தினர் சுமித்ராவை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சுமித்ரா தனது தம்பி ஜீவன்குமாரிடம் செல்போனில் பேசினார். அவரிடம், என்னை அடித்து உதைக்கின்றனர். கழுத்தில் கயிறை போட்டு இறுக்குகிறார்கள் என கதறி அழுது கொண்டு பதறிய குரலில் பேசி கொண்டிருந்தார். அதற்குள் அந்த செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.

உடனடியாக சுமித்ராவின் குடும்பத்தினர், உறவினர்கள் பதறி அடித்து கொண்டு, கந்திலியில் உள்ள சுமித்ராவின் வீட்டிற்கு வந்தனர். அங்கு பஷ்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமித்ரா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறினர். சுமித்ரா பிணமாக கிடப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சுமித்ராவின் தந்தை சிவக்குமார் கந்திலி போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை சுமித்ராவின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், சுமித்ராவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமித்ராவை அடித்து கொலை செய்து இருக்கிறார்கள், அவர்கள் 8 பேரையும் கைது செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.

தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com