திருப்போரூர் அருகே மனைவியை அடித்துக்கொன்று நாடகமாடிய கணவன் கைது

திருப்போரூர் அருகே மனைவியை அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர் அருகே மனைவியை அடித்துக்கொன்று நாடகமாடிய கணவன் கைது
Published on

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள வள்ளிமான் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவரது மனைவி கனிமொழி (26). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள், 6 வயதில் ஒரு மகன், 10 மாத ஆண் குழந்தை உள்ளனர். முருகன், பன்றி வளர்த்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் தினந்தோறும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த முருகன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த முருகன், மனைவி கனிமொழியை மரக்கட்டையால் தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார். குடிபோதையில் இரவு என்ன நடந்தது என்பதை அறியாத முருகன் காலையில் எழுந்து பார்த்தபோது மனைவி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து முருகன், தான் மனைவியை தாக்கியதை மறைத்து விட்டு இயற்கையாகவே இறந்துள்ளார் என அருகில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார்.

மனைவியின் உடலை குளிர்சாதன சவப்பெட்டியில் வீட்டு வாசலில் வைத்துள்ளார். சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள், கனிமொழி சாவில் மர்மம் இருப்பதாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் கனிமொழியின் உடலை மீட்டு சோதனை செய்தபோது அவரது தலை, முகம், உடல் என பல்வேறு இடங்களில் காயம் இருப்பதை கண்டறிந்தனர். வீட்டுக்குள் ரத்த கறைகள் படிந்திருந்ததை பார்த்த போலீசார், கனிமொழி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறுதி செய்தனர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மனைவியை குடிபோதையில் அடித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com