

திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கத்தை சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் தேவபுத்திரன் (வயது 24). இவர் பெரும்புதூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று கல்லூரி முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பட்டரைபெரும்புதூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தேவபுத்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த நண்பர் லேசான காயத்துடன் தப்பினார்.
இது பற்றி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து, தேவபுத்திரன் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தேவபுத்திரன் உடலை மருத்துவர்கள் நீண்ட நேரமாகியும் பிரேத பரிசோதனை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திரளான சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை எதிரே உள்ள திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.