

உடுமலை,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். கோவிலில் பூசாரி. இவரது மகன் அஜீத்குமார் (வயது 21). அங்குள்ள ஒரு நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நூற்பாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச்சேர்ந்த முத்துலட்சுமி (21) ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் பழனியில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின்னர் அஜீத்குமார், முத்துலட்சுமி ஆகிய இருவரும் பூலாங்கிணரில் அஜீத்குமாரின் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஹரிகிருஷ்ணனுக்கு சிறுநீரகத்தில் கல் இருந்ததாகவும், அதனால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல முத்துலட்சுமிக்கும் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. திருமணமாகி 7 மாதமாகியும் குழந்தை இல்லையே என்றும் இருவரும் கவலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பகுதியில் உள்ள அறையில் அஜீத்குமார் தனது மனைவியுடன் படுத்திருந்தார். மற்றொரு அறையில் ஹரிகிருஷ்ணன், தனது மனைவி புஷ்பலதாவுடன் படுத்து தூங்கினார். ஹரிகிருஷ்ணன் நேற்று அதிகாலை எழுந்து பின்பக்கம் சென்று குளித்துவிட்டு காலை 5 மணியளவில் கோவிலுக்கு புறப்பட்டார். அதற்காக துண்டு எடுப்பதற்காக முன்பக்கமுள்ள அறைக்கு சென்று மின்விளக்கை போட்டுள்ளார். அப்போது அஜீத்குமார், முத்துலட்சுமி ஆகிய 2 பேரும் ஆளுக்கு ஒரு துப்பட்டாவில் அருகருகே ஒரே விட்டத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஹரிகிருஷ்ணன் உடுமலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அஜீத்குமார், முத்துலட்சுமி ஆகியோரது உடல்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து உடுமலை ஆர்.டி.ஓ.ரவிக்குமாரும் விசாரணை நடத்தினார்.