உளுந்தூர்பேட்டை அருகே, காரில் 120 கிலோ கஞ்சா கடத்தல், அண்ணன்-தம்பி கைது

உளுந்தூர்பேட்டை அருகே காரில் 120 கிலோ கஞ்சா கடத்திய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே, காரில் 120 கிலோ கஞ்சா கடத்தல், அண்ணன்-தம்பி கைது
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக வந்த கார் ஒன்றை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், காருக்குள் தலா 2 கிலோ எடை கொண்ட 60 கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் காரில் வந்த 2 பேரை பிடித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் ஆர்.எம். காலனி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன்கள் மணிகண்டன்(வயது 40), பிரபு(34) ஆகியோர் என்பதும், ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் அடுத்த அங்கன்னபள்ளி பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் இருந்து 120 கிலோ எடை கொண்ட கஞ்சா பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு, அதனை திண்டுக்கல்லை சேர்ந்த குமார் என்பவரிடம் கொடுப்பதற்காக காரில் கடத்தி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

இதையடுத்து கஞ்சாவை காரில் கடத்தி வந்த மணிகண்டன், பிரபு ஆகியோரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்ததோடு, காரில் இருந்த கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். கைதான மணிகண்டன் பி.ஏ.வும், பிரபு எம்.எஸ்சி.யும் படித்து முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரில் கஞ்சா கடத்திய அண்ணன்-தம்பியை கைது செய்த உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com