உளுந்தூர்பேட்டை அருகே விளைநிலத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே விளை நிலத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே விளைநிலத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகளை சமூக விரோதிகள் சிலர் நாட்டுத்துப்பாக்கி மூலம் வேட்டையாடி வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால் போலீசார் அவ்வப்போது வனப்பகுதி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சோதனை நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் எறையூரில் உள்ள ஒருவரது விளை நிலத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீசார் எறையூருக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள விளை நிலங்களில் சோதனை நடத்தினர். அப்போது விளை நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அந்தோணி (வயது 25), புஷ்பராஜ்(25), லியோ பிரகாஷ்(22), ஜோசப் ராஜ்(22), ஜான் ரோசாரியோ(25) ஆகியோர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com