உளுந்தூர்பேட்டை அருகே, வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டுகதவை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே, வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 52). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் பெட்டிக்கடையை உள்பக்கமாக பூட்டிவிட்டு அங்கேயே படுத்து தூங்கினார். வீட்டின் மாடியில் ராஜாவின் குடும்பத்தினர் படுத்து தூங்கினர். இந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள் ராஜா வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டின் ஒரு அறையில் இருந்த பீராவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை ராஜா தூங்கி எழுந்து பார்த்தபோது, அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், எடைக்கல் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடத்த வீட்டில் கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com