உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
Published on

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வடக்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் மகன் லட்சுமணன்(வயது 35), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு அரியலூரில் இருந்து சிமெண்டு கலவை ஏற்றிக்கொண்டு காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் எனும் இடம் அருகே வந்தபோது லட்சுமணன் திடீரென தனது லாரியை நிறுத்தினார். பின்னர் தான் கொண்டு வந்த கயிற்றால், லாரியின் இடது பக்க கதவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைபார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதுபற்றி எடைக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட லட்சுமணனின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது அவரது சட்டைப்பையில் துண்டு சீட்டு இருந்தது. அதில் தனது சாவுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், நான் தமிழக அரசை நம்புகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.

இதையடுத்து லட்சுமணனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன லட்சுமணனுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆனதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரியிலேயே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com