உளுந்தூர்பேட்டை அருகே அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 36 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த வாகன சோதனையில் 36 பேரின் ஓட்டுனர் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 36 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
Published on

உளுந்தூர்பேட்டை,

தமிழ்நாட்டில் வாகன போக்குவரத்தின் மையப்பகுதியாக உள்ளது உளுந்தூர்பேட்டை. சென்னையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் உளுந்தூர்பேட்டை நகருக்குள் வந்து தான் திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரிந்து செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதியில் வாகன போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதற்கிடையே பெருகி வரும் சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் அலுவலக வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன், விழுப்புரம் சரக வட்டார போக்குவரத்து அலுவலர் சவுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்களை கொண்ட குழுவினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக வாகனங்களை இயக்கியதாக 34 ஆம்னி பஸ்கள், 112 கார்கள், 60 சுற்றுலா வாகனங்கள் உள்பட மொத்தம் 210 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 36 பேரின் ஓட்டுனர் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். இந்த வாகன சோதனையின் போது, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜ்குமார், சுந்தரராஜன், ரவிச்சந்திரன், கவின்ராஜ், மீனாகுமாரி, குண்டுமணி, சத்யா மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com