உளுந்தூர்பேட்டை அருகே, வேன் கவிழ்ந்தது - டிரைவர் உள்பட 13 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி வேன் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே, வேன் கவிழ்ந்தது - டிரைவர் உள்பட 13 பேர் படுகாயம்
Published on

உளுந்தூர்பேட்டை,

தஞ்சை மாவட்டம் மனோஜ்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 41). இவர் அதேஊரை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் ஒரு வேனில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். பின்னர் அவர்கள் அனைவரும் துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு வேனில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

வேனை மனோஜ்பட்டியை சேர்ந்த கதிரேசன்(35) என்பவர் ஓட்டினார். அந்த வேன் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

ஆசனூர் தொழிற்பேட்டை அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியபடி சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த செல்வகுமார், விஜயா(52), லட்சுமி(42), ராணி(52), இலஞ்சியம்(50), கனகவள்ளி (50), கலைச்செல்வி(40), டிரைவர் கதிரேசன் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலத்த காயமடைந்த 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com