உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர், தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டியதாக என்.எல்.சி. கூட்டுறவு சங்க ஊழியர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக என்.எல்.சி. கூட்டுறவு சங்க ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர், தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டியதாக என்.எல்.சி. கூட்டுறவு சங்க ஊழியர் மீது வழக்கு
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆண்டிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கிருஷ்ணராஜ்(வயது 22). இவர் நேற்று காலையில் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிருஷ்ணராஜின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கிருஷ்ணராஜின் சித்தப்பா திருநாவலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் எங்களது குடும்பத்துக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்த என்.எல்.சி. கூட்டுறவு சங்க ஊழியரான வெங்கடேசனின் குடும்பத்துக்கும் இடப்பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று(அதாவது நேற்று முன்தினம்) தனது வீட்டிற்கு வந்த வெங்கடேசன், என்னையும், எனது அண்ணன் மகன் கிருஷ்ணராஜையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே அவரது சாவுக்கு காரணமான வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கிருஷ்ணராஜை தற்கொலைக்கு தூண்டியதாக வெங்கடேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com