

உளுந்தூர்பேட்டை,
கடலூர் மாவட்டம் மேலக்குப்பம் அருகே உள்ள நயினார்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 23), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது உறவினர் செல்வராஜ் என்பவருடன் உளுந்தூர்பேட்டை புமாம்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வீரபாண்டியன்(24), சிவமணி(26), மாயவேல்(35), புகழேந்தி(24) ஆகிய 4 பேரும் சுரேஷ் மற்றும் செல்வராஜிடம், எதற்காக இங்கு நிற்கிறீர்கள்? என கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் சுரேஷ், மாயவேல் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து இதுகுறித்து சுரேஷ் மற்றும் வீரபாண்டி உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த சுரேஷ், செல்வராஜ், வீரபாண்டியன், சிவமணி, மாயவேல், புகழேந்தி ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.