ஊரப்பாக்கம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

ஊரப்பாக்கம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊரப்பாக்கம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கம் அறிஞர் அண்ணா காலனி பகுதியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரபாண்டி (வயது 21), இவர் கடந்த 4-ந்தேதி இரவு ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டல் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மற்றொரு மொபட்டில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஓட்டல் அருகே மறைந்து இருந்த 3 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து ஓடி வந்து வீச்சரிவாளால் சரமாரியாக வீராவை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வீராவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும்போது வழியிலேயே வீரா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் 5 பேர் கொண்ட 2 தனிப்படை போலீசார் ஓட்டல் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மறைந்து இருந்த ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த தீபக்ராஜ்(24), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த அமரவேல் என்கிற அமர் (22), நாகராஜ் (24), ரமேஷ் (25), ஆலயவாசன்( 25) ஆகியோரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக வீராவை வெட்டிக்கொலை செய்ததாக 5 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் கூடுவாஞ்சேரி போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 5 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவர்களிடம் இருந்து மொபட், வீச்சரிவாள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com