

ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கொண்டம்பட்டிபுதூர் ஒன்னகரை காப்புக்காட்டில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வனப்பகுதியில் மரங்களும், புற்களும் காய்ந்த நிலையில் இருந்ததால் தீ வேகமாக பரவியது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் காட்டுப்பகுதியில் உள்ள புல், முட்புதர்கள், காய்ந்த மரங்கள், செடிகள் அனைத்தும் எரிந்து சேதமாகின.
மேலும் காற்று வீசியதால் ஆங்காங்கே தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர்
ஆனால் தீ எரியும் இடத்திற்குள் வாகனம் செல்ல வழியில்லாததால் அவர்கள் திரும்பி சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி வன சரக அலுவலர் நாகேஷ் உத்தரவின் பேரில் வனகாப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வன காவலர்கள் சேட்டு, மாதப்பன் மற்றும் வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனரா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.