உத்திரமேரூர் அருகே, மனைவியின் கள்ளக்காதலன் அடித்து கொலை - 2 பேர் கைது

உத்திரமேரூர் அருகே மனைவியின் கள்ளக் காதலன் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர் அருகே, மனைவியின் கள்ளக்காதலன் அடித்து கொலை - 2 பேர் கைது
Published on

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் அடுத்த பருத்திக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 38). இவர், உத்திரமேரூர் பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு திருமணமாகி கணவர் ஜெயகுமாருடன் பருத்திக்கொல்லை கிராமத்தில் வசித்து வருகிறார். சண்முகசுந்தரத்துக்கும், திவ்யாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் அறிந்த ஜெயகுமார் மனைவியை கண்டித்தார். ஆனால் திவ்யா, கணவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து சண்முகசுந்தரத்துடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

அடித்து கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயகுமார் தனது நண்பர் தினேஷ் (22) உடன் சண்முகசுந்தரத்தை மல்லியங்கரைகனை அருகே அழைத்துச்சென்று தனது மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். இதனால் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஜெயகுமார் அருகில் இருந்த கட்டையை எடுத்து சண்முகசுந்தரத்தின் தலையில் பலமாக தாக்கினார். இதில் சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகுமார் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com