வாணியம்பாடி அருகே பயங்கரம் நிலத்தகராறில் தாத்தா-பேரன் சரமாரி வெட்டிக்கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்

வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் தாத்தா, பேரன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
வாணியம்பாடி அருகே பயங்கரம் நிலத்தகராறில் தாத்தா-பேரன் சரமாரி வெட்டிக்கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்
Published on

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்மக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வெப்பலம்பட்டி ஏரிப்பள்ளம் வட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57). இவருக்கும், அவரது உறவினர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை வெப்பாலம்பட்டியை அடுத்த ஏரிக்கொல்லை வட்டம் பகுதியில் இருந்து, பெருமாள் தனது பேரன் சந்துருவை (12) அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கொத்தக்கோட்டை என்ற இடத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்துக்கு சென்றார்.

அங்கு பாலை ஊற்றி விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வெப்பலம்பட்டி ரோட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் பெருமாளை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதனை தடுக்க முயன்ற அவரது பேரன் சந்துருவையும் மர்மநபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த சந்துருவை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்துவிட்டான்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தாத்தா, பேரனை வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

மர்ம நபர்களால் தாத்தா, பேரன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com