வாசுதேவநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி 2 பேர் படுகாயம்

வாசுதேவநல்லூர் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில், விவசாயி பரிதாபமாக பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாசுதேவநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி 2 பேர் படுகாயம்
Published on

வாசுதேவநல்லூர்,

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 25). விவசாயி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வாசுதேவநல்லூருக்கு சென்றார்.

வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே புளியங்குடி பஸ் நிலையம் மேலத்தெருவை சேர்ந்த மாரித்துரை (30), பூமாரி (45) ஆகிய 2 பேர் வந்த மோட்டார் சைக்கிளும், பேச்சிமுத்து ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் பேச்சிமுத்து தூக்கி வீசப்பட்டு லாரியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மாரித்துரையும், பூமாரியும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு மாரித்துரையை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும், பூமாரியை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் பலியான பேச்சிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் போடி அம்பத்தியை சேர்ந்த நாகராஜ் (53) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com