வீரபாண்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி-தம்பி படுகாயம்

வீரபாண்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார். அவரது தம்பி படுகாயம் அடைந்தார்.
வீரபாண்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி-தம்பி படுகாயம்
Published on

உப்புக்கோட்டை,

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரம் ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன்கள் ராஜ்குமார் (வயது 38), சிவக்குமார் (36). இதில் ராஜ்குமாருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். சிவக்குமாரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர், தனது அண்ணனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். ராஜ்குமாரும், சிவக்குமாரும் தனது வீட்டின் மாடியில் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவும் வழக்கம்போல் அண்ணன்-தம்பி 2 பேரும் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவரையொருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். ஒருகட்டத்தில் மாடியின் பக்கவாட்டு சுவரின் அருகில் நின்று தகராறில் ஈடுபட்ட 2 பேரும், எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் ராஜ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிவக்குமாரும் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து 2 பேரையும் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜ்குமார் பரிதாபமாக இறந்துபோனார். சிவக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com