வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட - 260 சத்துணவு ஊழியர்கள் கைது

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 260 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட - 260 சத்துணவு ஊழியர்கள் கைது
Published on

வேலூர்,

வேலூர் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். பொருளாளர் உமாராணி, செயலாளர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக சங்க மாநிலத்தலைவர் சுந்தராம்பாள் கலந்து கொண்டு 6 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், குறைவான குழந்தைகளை காரணம் காட்டி சத்துணவு மையங்களை மூடக்கூடாது, உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், குடும்ப நல ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தையொட்டி வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் மேற்பார்வையில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், கவிதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் இரும்பு கம்பிகள் (பேரிகார்டு) மூலம் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் மணி நேர ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் சங்க மாநிலத்தலைவர் தலைமையில் நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தின் அருகே சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

தொடர்ந்து அவர்கள் ரங்காபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 221 பெண்கள் உள்பட 260 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறியல் காரணமாக கலெக்டர் அலுவலகம் அருகே சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com